கோலாலம்பூர், பிப்ரவரி.14-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைவர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி மீதான பங்குகள் வைப்பு குறித்த புகார்களை விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பணிக் குழு, தனது பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டதாக அதன் தலைவர் டுசுகி மொக்தார் இன்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "விசாரணை தொடங்கி விட்டது. இந்த வழக்கோடு தொடர்புடைய தகவல்களைத் தற்போது நாங்கள் திரட்டி வருகிறோம்," என்று மலாய் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான பங்குகளை அஸாம் பாக்கி வைத்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்ட சில நாட்களில், அமைச்சரவையின் உத்தரவின் பேரில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷாம்சுல் அஸ்ரி அபு பாக்கார், இச்சிறப்பு விசாரணைக் குழுவை அறிவித்திருந்தார். இதில் சட்டத்துறை தலைவரான டுசுகி மொக்தார் தலைவராகவும், கருவூல பொதுச் செயலாளர் ஜோஹான் மாஹ்மூட் மெரிகான் மற்றும் பொதுச் சேவைத் துறை இயக்குநர் வான் அஹ்மாட் டாஹ்லான் அப்துல் அஸிஸ் ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.








