பினாங்கு துறைமுக எல்லைக்குள், சுல்தான் அப்துல் ஹாலிம் படகு முனையம் அருகே பயணிகள் படகும், ரசாயனக் கப்பலான எம்வி மெகார் ஜெயாவும் மோதிய சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என பினாங்கு நுகர்வோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி நடந்த இந்த மோதலில், படகில் பயணம் செய்த 21 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் மிகப் பெரிய விபத்தாக மாறியிருக்கக்கூடும் என பினாங்கு நுகர்வோர் சங்கத் தலைவர் முஹைதீன் அப்துல் காடீர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் பினாங்கு துறைமுகத்தின் முதல் படகு போக்குவரத்து நிர்வாக அமைப்பான விடிஎம்எஸ் (VTMS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த மோதல் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என முஹைதீன் தெரிவித்துள்ளார்.
பினாங்கு துறைமுக ஆணையம் மேற்கொண்டு வரும் விசாரணையை பினாங்கு நுகர்வோர் சங்கம் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
விடிஎம்எஸ் மூலம் ரேடார் மற்றும் தானியங்கி அடையாள அமைப்பின் உதவியுடன் கப்பல்களின் நகர்வுகளை கண்காணிக்க முடியும். எனவே, மோதலுக்கு முன்னர் இரு கப்பல்களுக்கும் ஏதேனும் எச்சரிக்கை அல்லது தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டதா என்பதை விசாரித்து, விசாரணை முடிவுகளை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.








