கோலாலம்பூர், பிப்ரவரி.05-
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் வனவிலங்கான புலியை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக, தொழிலதிபர் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 3 லட்சம் ரிங்கிட் அபராதமும் விதித்து கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் பிரிவு 68(2)(c)-இன் கீழ் குற்றவாளி எனக் கண்டறிந்த பிறகு, நீதிபதி ஸாக்கி சாலே, தொழிலதிபர் ங் சிங் ஹுவாட்டுக்கு இத்தண்டனையை விதித்தார்.
இக்குற்றமானது, கடந்த 2022-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 1-ஆம் தேதி, ஜாலான் துன் ரசாக் பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், தனது தரப்பு வாதத்தில் நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்த ங் சிங் ஹுவாட் தவறியதால், இத்தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதே வேளையில், அபராதத் தொகையான 3 லட்சம் ரிங்கிட்டை, ங் சிங் செலுத்தத் தவறினால், அவர் மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி ஸாக்கி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
மீண்டும் இது போன்ற குற்றத்தை, ங் சிங் செய்யக் கூடாது என்றும், விலங்குகளிடம் கருணை காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், "அவை பேச முடியாத அப்பாவி உயிரினங்கள்," என்றும் ஸாக்கி சுட்டிக் காட்டினார்.
இந்நிலையில், இன்றைய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ங் சிங்கின் வழக்கறிஞர் Hasshahari Johari Mawi நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து, 30 ஆயிரம் ரிங்கிட் பிணையில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.








