லஹாட் டத்துவில் ஊடுருவல் மற்றும் மோதல் சம்பவம் நிகழ்ந்து சுமார் 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், சபாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளின் பாதுகாப்பு நிலைமை குறித்து வெளிநாடுகளின் நம்பிக்கையை மீட்டெடுக்க மலேசிய அரசாங்கம் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு தூதர்கள் மற்றும் பிரதிநிதிகள் சபாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பாதுகாப்பு நிலைமையை நேரடியாகப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லஹாட் டத்து சம்பவமானது அப்பகுதி மக்களை மட்டுமின்றி, அதன் சுற்றுலாத் தளங்களையும் பெருமளவில் பாதித்ததாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
என்றாலும், தற்போது நிலைமை பெரிதும் மேம்பட்டு, மக்கள் நம்பிக்கையுடன் செல்லக்கூடிய சூழல் உருவாகியுள்ளதால், வெளிநாடுகளின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான நேரடி அணுகுமுறை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு தூதர்கள் மற்றும் பிரதிநிதிகள் மூன்று நாட்கள், இரண்டு இரவு பயணமாக சபாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அங்கு காடுகள், தீவுகள் உள்ளிட்ட பகுதிகளை அவர்கள் நேரில் பார்வையிட்டு, பாதுகாப்பு நிலைமையை அனுபவத்தின் மூலம் அறிந்துகொள்ள உள்ளனர்.
10 மாவட்டங்களை உள்ளடக்கிய சபா கிழக்குப் பாதுகாப்புக் கட்டளையான ஸ்க்கோம், அப்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய பொறுப்பை வகித்து வருகின்றது.
இந்த முயற்சியின் மூலம், சம்பந்தப்பட்ட நாடுகள் தங்களது குடிமக்களுக்கான பயண எச்சரிக்கைகளை மறுபரிசீலனை செய்யும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் இஸ்மாயில் சபாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.








