கோலாலம்பூர், ஆகஸ்ட் 21-
2025-ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில், முதல் வீடு வாங்குபவர்களுக்கு 30 ஆயிரம் ரிங்கிட் வரையிலான MADANI முன்பணத் திட்டம் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றுமை அரசாங்கத்தின் 'Rumahku, Syurgaku' என்ற கொள்கை அடிப்படையில் முன்பணம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவித்துள்ளார்.
முதன்முறையாக வீடு வாங்குபவர்கள், குறிப்பாக B40 மற்றும் M40 பிரிவை சேர்ந்தவர்களின் மாதாந்திர சுமையைக் குறைக்க அத்திட்டம் வழிவகுக்கும் என்றார் அவர்.
அதேவேளை, இலக்கவியல் மாற்றம் குறித்தும் மக்களின் வாழ்க்கை மேம்ப்பாடு சார்ந்தும் 2025-ஆம் வரவு செலவு திட்டத்தில் சேர்க்க 1 பில்லியனை உட்படுத்திய மொத்தம் 32 திட்டங்கள் நிதி அமைச்சிட சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் ங்கா கோர் மிங் கூறினார்.
மேலும், 2024-ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் இருந்து 12 திட்டங்களை தமது அமைச்சு அமல்படுத்தி விட்டதையும் அவர் குறிப்பிட்டார்.








