கோத்தா கினபாலு, பிப்ரவரி.19-
கோத்தா கினபாலு, இண்டா பெர்மாய் பகுதியில், கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மேலும் இரண்டு உடல் பாகங்களைத் தேடும் பணியில் அம்மாநில போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அப்பெண்ணின் கை மற்றும் காலை தேடும் பணியானது, தடுத்து வைக்கப்பட்டுள்ள 71 வயது முதன்மை சந்தேக நபர் அளிக்கும் தகவலின் படி, மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோத்தா கினபாலு மாவட்ட போலீஸ் தலைவர் சையிட் லோட் சையிட் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு, இவ்வழக்கு குறித்த மேல் விவரங்களை வெளியிட இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக 71 வயது உள்ளூர் ஆடவரும், அவரது 3 பிள்ளைகளும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.








