ரோஹிங்கியா அகதிகளை ஏற்பதில்லை என்ற சரவாக் மாநில அரசின் முடிவு, மனிதாபிமானம் இல்லாத செயல் அல்ல என்று அம்மாநில சுற்றுலா, கலை, புத்தாக்கத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்ஸா விளக்கியுள்ளார்.
இது குறித்துப் பேசிய டத்தோஸ்ரீ அப்துல் கரீம், "மியான்மரில் நடக்கும் துயரங்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் குறித்து நாங்கள் வருத்தமடைகிறோம். ஆனால், அகதிகள் வருகையானது நாட்டின் நீண்டகால சமூக மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் முறையான வழியிலேயே கையாளப்பட வேண்டும்" என்றார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஓபெங் தலைமையிலான சரவாக் அரசு எடுத்துள்ள இந்த முடிவு சரியானதுதான் என்று குறிப்பிட்ட அவர், கோவிட்-19 காலகட்டத்தில் எல்லையோரங்களில் தவித்த அந்நியத் தொழிலாளர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் சரவாக் அரசு உதவியதை நினைவூட்டினார். மேலும், மலேசியாவிற்குள் அகதிகளை அனுமதிக்கும் போது மத்திய அரசு அதனை மிகவும் முறையாகவும், திட்டமிட்டபடியும் நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








