நேற்று ஜாலான் துங்கு பகுதியில் உள்ள பெகாஹாக் 2 தோட்டத்தில், காட்டு யானை தாக்கியதில் 69 வயது முதியவர் உயிரிழந்தார்.
நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் பாதிக்கப்பட்டவரும், அவரது 38 வயது மகனும், செம்பனைத் தோட்டத்தில் இருந்த போது, திடீரென அங்கு ஒரு காட்டு யானை வந்துள்ளது.
அப்போது, அந்த முதியவர் தனது மகனுடன் சேர்ந்து கதவை மூடி அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, அந்த யானை தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அந்த யானையை விரட்டி தனது தந்தையை மீட்க, அவரது மகன் எவ்வளவோ முயற்சித்தும், அது பலனளிக்காமல் போனதாக லஹாட் டத்து மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் ஜிம்மி பான்யாவ் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த முதியவர், லஹாட் டத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது, அவர் உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதாகவும் ஜிம்மி பான்யாவ் குறிப்பிட்டுள்ளார்.








