கோலாலம்பூர், பிப்ரவரி.27-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த, அரச விசாரணை ஆணையம் அமைப்பது தொடர்பாக இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார்.
Velocity Capital Partner Bhd நிறுவனத்தில் 1.416 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 17.7 மில்லியன் பங்குகளை அஸாம் பாக்கி வைத்திருப்பதாகக் கூறப்படும் புகார் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்திற்குள் 'கார்ப்பரேட் மாஃபியாக்கள்' இருப்பதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து இந்த அரச விசாரணை கோரப்பட்டுள்ளது.
இன்று காஜாங்கில் மஸ்ஜிட் ஜாமெக் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், "அமைச்சரவையில் நாங்கள் இது குறித்து விவாதித்துள்ளோம், இது தொடர்பான விரிவான அறிக்கை பின்னர் வெளியிடப்படும்" என்று கூறினார்.
ஜசெக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அசாம் பாக்கி மீதான புகார்களை விசாரிக்க உடனடியாக அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது தொடர்பாக கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் டத்தோ ஶ்ரீ அன்வார் இதனைத் தெரிவித்தார்.








