பாயான் லெப்பாஸ், மார்ச்.13-
பினாங்கு, பாயான் லெப்பாஸ் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து சீனாவிற்கு புறப்பட ஆயத்தமான முதியவர் ஒருவரும், அவரின் நண்பரும், நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் அமர்ந்திருந்த வேளையில் தனது நண்பரின் பயணப் பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக விளையாட்டாக அந்த முதியவர் கூறியது, அவருக்கே வினையானது.
நண்பரின் பயணப் பெட்டியைச் சோதனை செய்யும் வகையில் வகையில் 64 வயது முதியவரும், அவரின் 60 வயது நண்பரும் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டதாக பினாங்கு, பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சஸாலி அடாம் தெரிவித்தார்.
பின்னர் அந்த இரு நபர்களின் பயணப் பெட்டிகளைச் சோதனையிட்ட போலீசார், அவற்றில் வெடிகுண்டுயில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.
தங்களை விடுவித்து விடுவார்கள் என்று காத்திருந்த அவ்விரு நண்பர்களும், சீனாவிற்கு செல்ல முடியாமல், விசாரணைக்கு ஏதுவாக மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டனர் என்று ஏசிபி சஸாலி குறிப்பிட்டார்.
சீனாவிற்குச் செல்லும் பயண மகிழ்ச்சியில் அந்த முதியவர் செய்த குறும்புத்தனத்தால் இருவரும் தற்போது தடுத்து வைக்கப்பட்டு, குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி சஸாலி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.








