மேற்காசிய போர் நெருக்கடி மேலும் தீவிரமானால், அமைச்சர்களின் சம்பளக் குறைப்பை அமல்படுத்த அமைச்சரவை தயாராக உள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளரும், தொடர்புத்துறை அமைச்சருமான ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட முறையில், பிரதமர் வழங்கும் எந்த உத்தரவையும் ஏற்கத் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பதவியேற்ற நாளிலிருந்தே அமைச்சர்களின் சம்பளமானது குறைக்கப்பட்ட நிலையில் தான் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது பற்றி முன்பே அமைச்சரவை ஆலோசித்துள்ளதாகவும், பிரதமர் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நிச்சயமற்ற நிலை நீடித்தால், அமைச்சர்களின் சம்பளத்தைக் குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








