பினாங்கு, மச்சாங் புபோக் பகுதியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 43 வயது ஆடவர் ஒருவர் காயமடைந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் சந்தேக நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தையும் விசாரித்து வருகின்றனர்.
ஜாலான் சுங்கை லெம்பூ பகுதியில் உள்ள சீன மயானத்திற்கு அருகிலுள்ள பழைய வாகனங்கள் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் பணிமனையில் நேற்று பிற்பகல் சுமார் 1.05 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட நபரின் வலது உள்ளங்கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டதுடன், எலும்பு முறிவும் ஏற்பட்டதாக செபெராங் பிறை தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் நிக் அமீனுதீன் ராஜா அப்துல்லா தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து பாதிக்கப்பட்ட நபரை அணுகியதாக தெரியவந்துள்ளது.
அவர்களில் ஒருவர் அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், பின்னர் இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.








