இந்தோனேசியாவின் சுகார்னோ-ஹத்தா அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 39 வயது மலேசிய விமானி தொடர்பான போதைப்பொருள் கடத்தல் வழக்கில், மேலும் ஆறு உள்ளூர் ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட விமானியிடம் புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டதாக அதன் இயக்குநர் டத்தோ உசேன் ஓமர் கான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 11 முதல் 15-ஆம் தேதி வரை புக்கிட் அமானைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஜாகார்த்தா சென்று விமானியிடம் விசாரணை நடத்தியிருந்தது.
அந்த விசாரணையில் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 20 முதல் 28-ஆம் தேதி வரை புக்கிட் அமான் நடத்திய சிறப்பு நடவடிக்கையில் 23 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆறு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 6 பேரும் அந்த விமானிக்குப் போதைப்பொருட்களை வழங்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் கடத்தல் நபர்களாக செயல்பட்டதாக உசேன் ஓமர் கான் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஆறு பேரும் 1985 அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.








