முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் அவரது மகன் நசிஃபுதீன் ஆகியோர் 1.7 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான வரிப் பாக்கியை செலுத்தத் தவறியதையடுத்து எதிர்கொண்ட திவால் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வரித் தொகை தொடர்பாக எஸ்.சி.ஐ.டி எனப்படும் வருமான வரி சிறப்பு ஆணையர்கள் முன்பு இருவரும் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு முடிவுக்கு வரும் வரை, திவால் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க, சிறப்பு சூழ்நிலைகள் இருப்பதாக நீதிபதி அல்வி அப்துல் வஹாப் தெரிவித்துள்ளார்.
மேலும், திவால் நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டும் என்ற நஜீப் மற்றும் நசிஃபுதீன் ஆகியோரின் கோரிக்கையை நிராகரித்த போது, புத்ராஜெயா உயர்நீதிமன்றம் தனது அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.சி.ஐ.டி முன் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டில் தீவிரமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான இவ்வழக்கில், சட்டரீதியாக வாதிடக்கூடிய பல அம்சங்கள் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆனால், உயர்நீதிமன்றம் இந்த அம்சங்களை போதுமான அளவில் பரிசீலிக்காமல், திவால் நடவடிக்கையை இடைநிறுத்துவதற்கான காரணங்கள் உள்ளனவா என்பதை உரிய முறையில் மதிப்பீடு செய்யத் தவறியதாக நீதிபதி அல்வி குறிப்பிட்டுள்ளார்.








