கோலாலம்பூர், பிப்ரவரி.04-
மலேசியா மற்றும் இந்தோனேசியா இடையிலான எல்லை நிர்ணயம் என்பது இழப்பீடு அல்லது லாபத்தின் அடிப்படையில் அமையாமல், 1891 மற்றும் 1915-ஆம் ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்ட பிரிட்டிஷ்-டச்சு எல்லை உடன்படிக்கைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் இன்று விளக்கமளித்தார்.
இதன் மூலம் Sinapat மற்றும் Sesai ஆகிய நதிப் பகுதிகளில் மலேசியாவிற்குக் கூடுதலாக 7.8 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வரலாற்று ரீதியாக இந்தோனேசியாவின் நிர்வாகத்தில் இருந்த சில பகுதிகள் குறித்து 1977-ஆம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, தற்போது இந்த உடன்படிக்கைகளின் படி எல்லைகள் இறுதிச் செய்யப்பட்டுள்ளன.
இந்த எல்லை நிர்ணய நடவடிக்கைகளில் சபா மற்றும் சரவாக் மாநில அரசுகள் முழுமையாக உள்வாங்கப்பட்டிருப்பதாகவும், சபா முதலமைச்சர் அலுவலகம் மற்றும் நில அளவைத் துறையின் ஒப்புதல் இன்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
சுமார் 2,064 கி.மீ நீளமுள்ள மலேசியா-இந்தோனேசியா நில எல்லைப் பிரச்சனைகளைத் தீர்க்கும் இந்த முக்கிய முடிவுகள், கடந்த 2025 பிப்ரவரி 18 அன்று நடைபெற்ற இரு நாடுகளின் கூட்டு எல்லைக் குழுக் கூட்டத்தில் இறுதி நிலையை எட்டியுள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் விளக்கம் அளித்தார்.








