தேசிய அளவிலான மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான இலக்கவியல் தலைமைத்துவம் மற்றும் மடானி கல்வி உருமாற்றுக் கருத்தரங்கம் 2026, மலாக்காவில் மூன்று நாட்களுக்கு நடைபெற்றது.
இந்த செயற்கை நுண்ணறிவு இலக்கவியல் சிறப்பு கருத்தரங்கை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
தமிழ்ப்பள்ளிகள் தமிழாசிரியர் கழகமும், இலக்கவியல் அமைச்சும் கல்வியமைச்சோடு இணைந்து இந்த இலக்கவியல் செயற்கை நுண்ணறிவு சிறப்பு அங்கத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன.
2030-ஆம் ஆண்டு, மலேசியா செயற்கை நுண்ணறிவு நாடாக மாற வேண்டும் என்கிற இலக்கை நோக்கி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இலக்கவியல் தொழில்நுட்பத்தின் வழி கடந்த ஆண்டு மலேசியாவின் பொருளாதாரம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 25.5% அளவில் பங்களித்துள்ளது.
எதிர்வரும் 2030-ம் ஆண்டில், அது 30% வரை உயர வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கல்வித் துறையில் இலக்கவியல் தொழில்நுட்பம் இன்றியமையாதது. இலக்கவியல் துறையில் நாடு கோலோச்சவும், துறையின் சவால்களை எதிர்கொள்ளவும், திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், பள்ளிகள் முக்கியப் பங்காற்றுகின்றன என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
470 தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கு கொண்ட இந்த நிகழ்ச்சியில் மலேசிய இலக்கவியல் கூட்டுறவு நிறுவன தலைவரும், ஆசிய வணிக கல்வி மையத்தின் செயற்கை நுண்ணறிவு பேராசிரியர் டாக்டர் டேவிட் ஆசிர்வாதமும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.








