சரவாக் மாநிலத்தின் பல பகுதிகளில் புகைமூட்டம் மோசமடைந்துள்ள நிலையில், 5 மாவட்டங்களில் காற்றுத் தரக் குறியீடு ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் அளவை எட்டியுள்ளது.
இந்த நிலைக்கு இந்தோனேசியாவின் கலிமந்தான் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயே காரணம் என சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, செரியான் மாவட்டத்தில் அதிகபட்சமாக காற்றுத் தரக் குறியீடு 171 ஆகப் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கூச்சிங் மற்றும் சமரஹான் ஆகிய பகுதிகளில் தலா 154, ஸ்ரீ அமான் பகுதியில் 139, பிந்துலு பகுதியில் 124 எனப் பதிவாகியுள்ளது.
காற்றுத் தரக் குறியீடு 101 முதல் 200 வரை பதிவானால், அது “ஆரோக்கியமற்ற நிலை” என வகைப்படுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கலிமந்தான் பகுதியில் தற்போது 643 காட்டுத்தீ பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
கலிமந்தான் பகுதியில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயால் உருவாகும் புகை, காற்றின் மூலம் சரவாக் பகுதிகளுக்கும் பரவி வருவதால், அங்கு புகைமூட்டத்தின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








