கே.எல்.சி.சி பகுதியில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி பணம் பறிக்கும் சட்டவிரோத புகைப்படத் தரகர்களைக் கட்டுப்படுத்த கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று கூட்டரசுப் பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.
அண்மையில் சுற்றுலாப் பயணி ஒருவர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL மற்றும் போலீஸ் துறையுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதான ஹன்னா இயோ குறிப்பிட்டார்.
சிசிடிவி கேமராக்கள் மூலம் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரை உடனுக்குடன் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
கடந்த சில நாட்களில் மட்டும் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட 18 புகைப்படத் தரகர்களைப் போலீசார் கைது செய்து இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.








