சபா, லஹத் டத்து-விலுள்ள DEWATA ஆற்றில், உதவிக்கேட்டு போராடிய தனது உடன் பிறந்தவரையும் உறவுக்கார பிள்ளையையும் காப்பாற்ற, ஆற்றில் குதித்த 33 வயது ஆடவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை மணி 11 அளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 16 மற்றும் 10 வயதுடைய அவ்விருவரையும், இதர இருவருடன் சேர்ந்து அவ்வாடவர் காப்பாற்றியுள்ளார்.
ஆனால், அவர் தரைக்கு வராதது கண்டறியப்பட்டதை அடுத்து, அங்கிருந்த உறவினர்களில் இருவர் ஆற்றில் குதித்து தேடிய போது, சுயநினைவின்றி கிடந்த நிலையில், அவ்வாடவர் மீட்கப்பட்டார்.
பின்னர், சம்பவ இடத்திலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லஹாட் டத்து மருத்துவமனைக்கு அவ்வாடவர் கொண்டு செல்லப்பட்ட வேளை, அவர் உயிரிழந்துவிட்டதை, பிற்பகல் மணி 12.49 அளவில் அங்கிருந்து மருத்துவ அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.
உடற்கூறு ஆய்விலும், அவர் நீரில் மூழ்கியதால் உயிரிழந்தது தெரியவந்துள்ளதாக, லஹாட் டத்து மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் துசுல்பஹரின் இஸ்மாயில் தெரிவித்தார்.








