கோத்தா திங்கி, பிப்ரவரி.25-
தனது கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்தது மற்றும் வயிற்றில் இருந்த கருவின் மரணத்திற்குக் காரணமாக இருந்தது தொடர்பாக 35 வயதுடைய ரோஹிங்கியா ஆடவர் ஒருவர் இன்று கோத்தா திங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
சிகை அலங்கரிப்பு நிலையத்தில் பணியாற்றிய ரஷிதுல்லா மோங் ஃபூமியா என்ற 35 வயது ஆடவர், மாஜிஸ்திரேட் நூர்காலிடா ஃபார்ஹானா அபு பாக்கார் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அதிகாலை வேளையில் கோத்தா திங்கி, கம்போங் மைகாட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 32 வயதுடைய தனது மனைவி ஃபாஸானா எஸ்கார் என்பவரைக் கொலை செய்ததாக ரஷிதுல்லா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்த ரோஹிங்கியா ஆடவர் தனது மனைவியின் தலையில் உலக்கையால் தாக்கியதில் அவர் உயிரிழந்ததுடன், வயிற்றில் இருந்த கருவும் சிதைந்தது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த அந்நிய நாட்டு ஆடவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








