முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடனான மன்னிப்பால், அவரைத் தொடர்புபடுத்தியுள்ள 1எம்டிபி வழக்கின் தற்போதைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் தெரிவித்துள்ளார்.
நிலுவையில் உள்ள வழக்குகள் வழக்கம்போல் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்றும், தற்போதைய நிலையே தொடரும் என்றும் அவர் கூறினார்.
இன்று காஜாங் சிறைச்சாலையில் நடைபெற்ற எஸ்பிஆர்எம்மின் ஊடகங்களுடனான துப்பாக்கிச் சுடும் நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் ஹலிம் அமான், ஒவ்வொரு வழக்கும் அதனுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் தனித்தனியாகக் கையாளப்பட வேண்டும் என்றார்.
நஜிப்பின் நிபந்தனை மன்னிப்பு, அவரது 1எம்டிபி வழக்கிலும் மேல்முறையீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று கேட்கப்பட்டபோது டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலிம் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக தமது உரையில், ஊழலைத் தடுக்கும் முயற்சியில் மக்களுக்குத் தகவல்களைச் சென்றடையச் செய்வதில் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
எஸ்பிஆர்எம் தனியாகச் செயல்பட முடியாது என்றும், ஊடகங்கள் தங்களது முக்கியமான உத்திசார் பங்காளிகளில் ஒன்று என்றும் அவர் கூறினார். டிஜிட்டல் யுகத்தில் தகவல்கள் விரைவாக வழங்கப்படுவதுடன், அவை உண்மையானவை, துல்லியமானவை மற்றும் பொறுப்பானவையாக இருப்பதும் அவசியம் என டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் வலியுறுத்தினார்.








