கோலாலம்பூர், பிப்ரவரி.12-
மலேசியாவில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியுள்ள சுமார் 20 லட்சம் மக்கள், 'சும்பங்கன் அசாஸ் ரஹ்மா' எனும் SARA திட்டத்தின் 100 ரிங்கிட் நிதியுதவியை ஒரே நாளில் பெற்றுள்ளதாக இரண்டாம் நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அஸிஸான் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை வரை சுமார் 200 மில்லியன் ரிங்கிட் நிதி விநியோகிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இம்முறை தொழில்நுட்பக் கோளாறுகள் இன்றி, கடைகளில் நீண்ட வரிசைகள் இல்லாமல் முறைமை சிறப்பாகச் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த 100 ரிங்கிட் உதவித்தொகை ரொக்கமாக வழங்கப்படாது. பயனர்கள் தங்களின் மைகாட் அடையாள அட்டை மூலம் அங்கீகரிக்கப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அமீர் ஹம்சா தெரிவித்தார்.








