சிலாங்கூர், சிப்பாங்கில் உள்ள 'WRP ஆசியா பசிபிக்' நிறுவனம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றிய 1,426 தொழிலாளர்களின் உரிமைகளை மனிதவள அமைச்சு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அந்த நிறுவனத்தின் மூடலால் 304 உள்ளூர் தொழிலாளர்களும், 1,122 வெளிநாட்டுத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் 15 முதல் பணிநீக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் மாத ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் மாத ஊதியம் மற்றும் இதர சலுகைகளை 'கடன் ஆதார படிவம்' மூலம் பெற்றுத்தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு PERKESO மூலம் வேலைவாய்ப்பு காப்புறுதித் திட்டத்தின் கீழ் நிதி உதவியும், 'MYFutureJobs' வழியாகப் புதிய வேலைகளுக்கான வழிகாட்டல்களும் வழங்கப்படுகின்றன.
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் புதிய முதலாளிகள் கிடைக்கும் வரை தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படுவதை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. தொழிலாளர் சட்டத்தின்படி இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நியாயமான முறையில் நடப்பதை அமைச்சு உறுதி செய்யும் என்று மனித வள அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








