கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடைநிலைப்பள்ளிகளில், 2025-ஆம் ஆண்டு SPM தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 152 பல்லின மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
நேற்று இரவு புக்கிட் ரிமாவ் MBSA மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமை தாங்கினார். இத்தேர்வில் 8A முதல் 11A வரை பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு, அவர் நேரடியாக ஊக்கத்தொகைகளை வழங்கி தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
'ஜெனரேசி செமர்லாங்' எனும் பெயரில் மூன்றாவது ஆண்டாக இந்த பாராட்டு விழா மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் தலைமையேற்று உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், "மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக கோத்தா கெமுனிங் தொகுதியில் கல்வி கருத்தரங்குகளும், இலவச துணைக் கல்வி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது மாணவர்களின் இந்தச் சிறந்த தேர்வு முடிவுகள், அந்த முயற்சிகளுக்குக் கிடைத்த நற்பலனை அத்தாட்சிப்படுத்துகின்றன" எனக் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்ட சாதனை மாணவர்கள், தங்களின் வெற்றிக்கான காரணங்கள் மற்றும் மகிழ்ச்சியைத் 'திசைகள்' ஊடகத்துடன் பிரத்யேகமாகப் பகிர்ந்து கொண்டனர்.
இவ்விழாவில் சாதனை மாணவர்களுடன், அவர்களின் பெற்றோர்களும் பெரும் திரளாகக் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.











