1எம்.டி.பி. நிதி ஊழல் தொடர்பாக 8 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கோரி தொடரப்பட்ட சிவில் வழக்கில், ஐந்து முக்கிய ஆவணங்களைப் பார்வையிட முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள விசாரணைக்கு முன்னதாக, இதுவரை மீட்டெடுக்கப்பட்ட சொத்துக்களின் பட்டியல் மற்றும் எட்டப்பட்ட சமரச உடன்படிக்கைகளின் விவரங்களை 21 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் மூலம் வழங்க 1எம்.டி.பி. நிறுவனத்திற்கு நீதித்துறை ஆணையர் முகமட் ரெஸுவான் இத்ருஸ் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்க இந்த விவரங்கள் அவசியமானவை என்றாலும், இந்த ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றப் பாதுகாப்பு உத்தரவின் கீழ் மிகவும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் இதைப் பார்வையிட முடியாது என்றும் நீதித்துறை ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.








