புத்ராஜெயா, பிப்ரவரி.10-
12 ஆண்டுகளுக்கு முன்பு கூச்சிங்கில் தங்கும் விடுதி ஒன்று வாங்கிய விவகாரத்தில் சுமார் 3 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஃபெல்டா தலைவர் இசா சமாட் மீது விதிக்கப்பட்ட தண்டனையை ஃபெடரல் நீதிமன்றம் மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.
மேல்முறையீடு செய்ததில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இழைத்த தவறு காரணமாக இதில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டியிருந்ததாக மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்குத் தலைமை வகித்த நீதிபதி நோர்டின் ஹசான் தனது தீர்ப்பில் இன்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, அவரின் விடுதலையை ரத்து செய்யக் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் விவரித்தார்.
இவ்வழக்கில், மேல்முறையீட்டை விசாரித்த மற்ற நீதிபதிகள் லீ சுவீ செங் மற்றும் ருஸிமா கஸாலி ஆவர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு, 3.09 மில்லியன் ரிங்கிட் தொடர்புடைய, 9 ஊழல் குற்றச்சாட்டுகளில், இசா சமாட் குற்றவாளி என உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
இதனையடுத்து, அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 15.4 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தற்போது கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்து வரும் Vazeer Alam Mydin Meera தலைமையிலான மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, இசா சமாட்டின் மேல்முறையீட்டை ஒருமனதாக அனுமதித்து, தண்டனையை ரத்து செய்து, தற்போதைய மேல்முறையீட்டிற்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.








