Apr 22, 2026
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலியாவிற்குச் செல்லும் 200 மில்லியன் லிட்டர் டீசல் மலேசியாவிற்குச் சொந்தமானது அல்ல - ஃபஹ்மி ஃபாட்சில் விளக்கம்
தற்போதைய செய்திகள்

ஆஸ்திரேலியாவிற்குச் செல்லும் 200 மில்லியன் லிட்டர் டீசல் மலேசியாவிற்குச் சொந்தமானது அல்ல - ஃபஹ்மி ஃபாட்சில் விளக்கம்

Share:

ஆஸ்திரேலிய கடற்கரையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் 200 மில்லியன் லிட்டர் டீசல் எரிபொருள் மலேசியாவிற்குச் சொந்தமானது அல்ல என்று அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.

தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றத்தின் தகவல் தொடர்பு உத்தரவு மையத்துடன் நடத்தப்பட்ட சரிபார்ப்பிற்குப் பிறகு இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டதாக தொடர்புதுறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவிற்குச் செல்லும் அந்த டீசல் விநியோகத்தில் மலேசியா மற்றும் புருணை ஆகிய நாடுகள் சம்பந்தப்பட்டிருப்பதாக வெளியான செய்திகள் குறித்து விளக்கம் அளித்த டத்தோ ஃபஹ்மி , அந்த எரிபொருள் மலேசியாவிற்குச் சொந்தமானது அல்ல என்றும், முன்னதாக பிலிப்பைன்ஸிற்கு அனுப்பப்பட்ட எரிபொருள் விநியோகத்தைப் போன்றதே இது என்றும் குறிப்பிட்டார். பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் மலேசியக் கடல் பகுதியில் சேமிப்புக் கிடங்குகளைக் கொண்டுள்ளதுடன், ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களையும் கொண்டுள்ளது.

இதன் காரணமாக, டீசலை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மலேசியாவிலிருந்து புறப்படக்கூடும், ஆனால் அந்த எரிபொருள் மலேசியாவின் இருப்பு அல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தினார். ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எரிபொருள் அமைச்சர் கிறிஸ் போவன் ஆகியோர், கூடுதல் டீசல் விநியோகம் மே மாத இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் ஆஸ்திரேலியாவை வந்தடையும் என்று குறிப்பிட்டிருந்த சூழலில் மலேசிய அரசாங்கம் இந்தத் தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளது.

Related News