குழந்தையின் சத்தத்தால் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் இரு அண்டை வீட்டாருக்கு இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஜோகூர், ஸ்கூடாயில் உள்ள தாமான் யூனிவெர்சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் இந்தச் சம்பவம் நடந்ததாக, ஜோஹோர் பாஹ்ரு உத்தாரா மாவட்டக் காவல் துறை தலைவர் எசிஸ்தன் கமிஷ்னர் பல்வீர் சிங் மஹின்டார் சிங் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணி அளவில் இச்சம்பவம் நடந்ததாகக் குறிப்பிடும் அவர், அது தொடர்பான காணொலி சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருவதாகவும் நேற்று மதியம் 3.43 மணி அளவில் தமது தரப்புக்குப் புகார் கிடைத்ததாகவும் பல்வீர் சிங் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து பொது மக்களிடம் தகவல் இருந்தால் உடனடியாக காவல் துறையினரைத் தொடர்பு கொண்டு கொடுக்கலாம் என்றார் அவர்.
58 வினாடிகள் கொண்ட அந்தக் காணொலியில், குழந்தையின் சத்தத்தைத் தாள முடியாத ஆடவர் ஒருவர், அவரது அண்டை வீட்டில் வசிக்கும் பெண்மணியைத் திட்டுவது பதிவாகி இருந்தது.
குழந்தையின் சத்தத்தால், இரவு நேரத்தில் தம்மால் தூங்க முடியவில்லை என அந்த ஆடவர் குறிப்பிட்டார்.








