கோலாலம்பூர், பிப்ரவரி.19-
நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி துன் அப்துல் ஹாமிட் முஹமட் தனது 83-வது வயதில் காலமானார்.
பினாங்கு, கெப்பாலா பத்தாஸில் பிறந்து வளர்ந்த அப்துல் ஹாமிட், 1969 மே மாதம் நீதித்துறை மற்றும் சட்டச் சேவையில் இணைந்தார். அங்கு அவர் சுமார் 21 ஆண்டுகள் பணியாற்றினார்.
அந்தக் காலக் கட்டத்தில், அவர் மாஜிஸ்திரேட், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி, சட்ட உதவிப் பணியகத்தின் உதவி இயக்குநர் மற்றும் உயர் நீதிமன்றத் துணைப் பதிவாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
1992 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அப்துல் ஹாமிட், 2002 இல் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். 2003 இல் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2007 செப்டம்பரில் மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி நாட்டின் தலைமை நீதிபதியாக அப்துல் ஹாமிட் நியமிக்கப்பட்டார். 2008 அக்டோபர் மாதம் தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து பணி ஓய்வு பெற்றார்.
மறைந்த அப்துல் ஹாமிட், சிவில் சட்டம் மற்றும் ஷரியா சட்டம் ஆகிய இரண்டிலும் தனித்துவமான அறிவைக் கொண்ட ஒரு சிறந்த நீதிபதி என்று முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஹாமிட் சுல்தான் அபு பாக்கார் வர்ணித்துள்ளார்.








