கோலாலம்பூர், அக்டோபர்.11-
மலாக்கா, அலோர் காஜாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியின் வகுப்பறையில் மூன்றாம் படிவ மாணவி ஒருவரை, இரண்டு மூத்த மாணவர்களை உள்ளடக்கிய கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் புரிந்த சம்பவம் தொடர்பான காணொளியை உடனடியாக சமூக வலைத்தளங்களிலிருந்து அகற்றுமாறு மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமான எம்சிஎம்சியை கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடெக் கேட்டுக் கொண்டார்.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் புலன் விசாரணை செய்து வரும் வேளையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த காணொளியை அகற்றுமாறு ஃபட்லீனா அறைகூவல் விடுத்துள்ளார்.
இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் மாணவர்கள் என்பதால் இந்த காணொளி பரவலாகப் பகிரப்படுவதைத் தடுக்க அந்த காணொளியை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சையும் தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக ஃபட்லீனா குறிப்பிட்டார்.








