May 15, 2026
Thisaigal NewsYouTube
ஜாலான் பிஜேஇயு வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரில் கள ஆய்வு
தற்போதைய செய்திகள்

ஜாலான் பிஜேஇயு வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரில் கள ஆய்வு

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜாலான் பிஜேஇயு 8/1 இல் உள்ள எம்பயர் ரெசிடென்ஸ் குடியிருப்பு பகுதிக்கு இன்று நேரில் சென்ற இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, அப்பகுதி மக்கள் எதிர்நோக்கி வரும் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டார்.

அண்மையில் பெய்த தொடர் பலத்த மழையின் காரணமாக, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் சேற்று நீர் புகுந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் விடுத்த அவசர புகாரைத் தொடர்ந்து டாமன்சாரா எம்.பி.யுமான கோபிந்த் சிங் உடனடியாக இந்த கள ஆய்வை மேற்கொண்டார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் கோபிந்த் சிங் , அங்குள்ள நிலவரம் குறித்து பெட்டாலிங் ஜெயா மாநகர மன்ற அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட வீட்டுவசதித் திட்ட மேம்பாட்டாளர்களுடன் இணைந்து விரிவான ஆலோசனைகளை நடத்தினார்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, குடியிருப்பு பகுதிக்குள் மீண்டும் வெள்ளமோ அல்லது சேற்று நீரோ புகாத வண்ணம் தடுப்பதற்கான நிரந்தர மற்றும் விரைவான தீர்வுகளை உடனே மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மேம்பாட்டாளர்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பெட்டாலிங் ஜெயா சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்படும் வெள்ளப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளூர் மாநகர் மன்றத்துடன் இணைந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் கோபிந்த் சிங் சுட்டிக்காட்டினார்.

Related News