கோலாலம்பூர், அக்டோபர்.15-
மாணவர்களின் மனநலத்தைப் பாதுகாக்க நாடு முழுவதும் கட்டாய உளவியல் ஆலோசனை அமர்வுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரியான டத்தோ மியோர் செக் ஹுசேன் மஹாயுடின் பரிந்துரைத்துள்ளார்.
ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான அவர், கல்வி அமைச்சு அனைத்து பள்ளிகளுக்கும் உளவியல் நிபுணர்களை அனுப்பி மாணவர்களின் மனநிலை மற்றும் நலனைச் சரியாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய ஆலோசனை அமர்வுகள், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெற வேண்டும் என்றும், பள்ளிகளில் வன்முறை மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கான சரியான நேரம் இது தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய மாணவர்கள் சமூக ஊடகங்கள், விளையாட்டுகள், திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் மூலமாக அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.








