கடந்த சனிக்கிழமை சிம்பாங் அம்பாட்டில் உள்ள ஒரு வீட்டில் காவல் துறை அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து வெளிநாட்டவர் ஒருவரிடம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் இரண்டு காவல் துறை அதிகாரிகள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்விவகாரம் குறித்து பினாங்கு காவல் துறைத் தலைவர் டத்தோ காவ் கோக் சின் கூறுகையில், 24 முதல் 37 வயதுடைய நான்கு பேரும் மாலை 4.30 மணி முதல் இங்குள்ள செபெராங் பெராய் தெங்கா மாவட்டத்தில் தனித்தனியாகக் கைது செய்யப்பட்டனர்.
நள்ளிரவு 1.30 மணியளவில், கட்டுமானப் பகுதியில் இருந்த வீட்டில் வெளிநாட்டுத் தொழிலாளியை காவல் துறை அதிகாரியாக வந்தவர் கொள்ளையடித்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதாக காவ் கோக் சின் கூறினார்.
இதனால் அந்த வெளிநாட்டுத் தொழிலாளி 820 வெள்ளி இழந்ததாகவும் சொன்னார்.
சாதாரன உடையில் வந்தவர் தம்மை காவல் துறை அதிகாரி என அடையாளப்படுத்திக் கொண்டு வீட்டில் உள்ளே புகுந்து 5000 வெள்ளியைக் கேட்டு மிரட்டியதாகவும் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை எனவும் கூறி உள்ளனர்.
மேலும், ஒரு வெளிநாட்டுத் தொழிலாளி தாக்கப்பட்டதோடு ஒரு கைப்பேசியும் பறிக்கப்பட்டதாக புகார் அளித்தவர் குறிப்பிட்டதை காவ் கோக் சின் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் நோந்துப் பணியில் ஈடுபடும் கான்ஸ்டபிள், கார்போரல் பதவியைக் கொண்ட இரு காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் உள்நாட்டுவாசிகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.








