கோலாலம்பூர், நவம்பர்.26-
அடுத்த ஆண்டு அட்டர்னி ஜெனரல் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் அதிகாரங்களைப் பிரிப்பதற்கான சட்டம் இயற்றும் செயல்முறையை அரசாங்கம் தொடங்கும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்துள்ளார்.
வரும் 2026 ஆம் ஆண்டு 15-வது நாடாளுமன்றத்தின், ஐந்தாவது கூட்டத் தொடரின் இரண்டாவது கூட்டத்தில், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அஸாலினா குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்டு வந்த இந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோசாதாவுக்கான முதல் சட்டத் திருத்த நடவடிக்கை ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தவுடன், அதனைத் தொடர்ந்து ஊதிய மசோதா மற்றும் சட்ட சீர்திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்றப்படும் என்றும் அஸாலினா தெரிவித்துள்ளார்.
இந்த சட்டதிருத்த நடவடிக்கையானது அட்டர்னி ஜெனரலின் ஆலோசனை செயல்பாடுகளையும், அரசு தரப்பு அதிகாரங்களையும் பிரிப்பதால், பல்வேறு சட்டங்களை ஒன்றாகத் திருத்தும் ஒருங்கிணைந்த மசோதா ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
அட்டர்னி ஜெனரல் குழுவில் இருந்து பெறபட்ட ஆலோசனைகள் மற்றும் கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அடிப்படையிலும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அஸாலினா தெரிவித்துள்ளார்.








