மலேசிய கலைப் படைப்புகள் அனைத்துலக சந்தையில் போட்டியிட வேண்டும்; கலைஞர்களும் ஒரு சிறந்த தொழில்முனைவோரே,” என தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் புகழ்பெற்ற ஹிப்-ஹாப் கலைஞர் யோகி பி அவர்களின் இசை ஒலிப்பதிவு கூடத்திற்கு நேற்று நேரில் சென்றிருந்த அமைச்சர் ஸ்டீவன் சிம், அவரது தொழில்சார்ந்த அணுகுமுறைகளைப் பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
1990-களில் 'பொயடிக் ஆமோ' குழுவிலிருந்து இன்று வரை மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, லண்டன் என அனைத்துலக அளவில் யோகி பி-இன் தமிழ் இசைப் பயணம் தடம் பதித்துள்ளது. அவர் உண்மையாகவே உலகிற்குச் சென்ற 'மலேசியாவின் ஏற்றுமதி தயாரிப்பு' ஆவார் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் புகழாரம் சூட்டினார்.
யோகி பி புகழ்பெற்ற ஒரு பெரிய கலைஞராக இருந்தாலும், சொந்தமாக ஸ்டுடியோ, தயாரிப்பு நிறுவனம் மற்றும் புதிய ஆல்பம் திட்டங்களுடன் ஒரு தொழில்முனைவோராக அவர் செயல்படுவது பாராட்டுக்குரியது.
யோகி பி தனது புதிய திட்டத்திற்காகத் தெக்குன் நேஷனல் அமைப்பின் எஸ்பியுஎம்ஐ நிதியுதவிக்கு விண்ணப்பித்திருந்தார். கடந்த ஜூன் 26-இல் விண்ணப்பித்து, எவ்வித அரசியல்வாதிகளின் சிபாரிசும் இன்றி, கடந்த ஜூலை 1-ஆம் தேதியே அவரது நிதியுதவி முற்றிலும் வெளிப்படையான முறையில் தெக்குன் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று ஸ்டீவன் சிம் சுட்டிக்காட்டினார்.
தகுதி வாய்ந்த சிறு வணிகர்கள், இளைஞர்கள், மகளிர் , கூட்டுறவுகள் மற்றும் கலைஞர்கள் என யாராக இருந்தாலும், அரசியல் பின்னணி இன்றி தங்களின் அமைச்சு தொடர்ந்து நேரடியாக உதவும் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் இச்சந்திப்பின் போது உறுதி அளித்தார்.










