அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக நிலைநிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் டத்தோ பஹ்மி ஃபட்சில் இன்று அறிவித்தார். தற்போதைய சூழலில் ஓய்வு வயதை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு, முதியோர்கள் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்குவதால் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்த முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் மலேசியா ஒரு முதியோர் நாடாக மாறி வரும் புள்ளிவிவரங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் தான் மலேசிய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது என்று டத்தோ பஹ்மி சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், ஊழியர்களின் சம்பளத்திலிருந்து 0.75 விழுக்காடு பிடித்தம் செய்யும் பெர்கேசோவின் 'லிண்டுங் 24 ஜாம்' திட்டம் இனி கட்டாயமில்லை என்றும், அது உடனடியாகச் சுயவிருப்பத்தின் அடிப்படையில் மாற்றியமைக்கப்படுவதாகவும் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது என்று டத்தோ பஹ்மி தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மீதான மக்களின் கருத்துக்களைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை மனிதவள அமைச்சு விரைவில் வெளியிடும் என்றும் டத்தோ தெரிவித்தார்.








