போர்ட் டிக்சன், லூகூட் பகுதியிலுள்ள பண்டார் ஸ்பிரிங்ஹில் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 17 வயது சிறுவன் கடுமையாக காயமடைந்துள்ளார்.
அவ்விபத்தில், சிறுவனின் இரு காதுகளிலும் சவ்வுகள் கிழிந்ததுடன், மூக்கில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
மேலும், விரல்கள் மற்றும் கைகளில் காயங்களும், முகத்தில் லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான புகாரானது, நேற்று மாலை பெறப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாப்னி அகமது தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், இந்த விபத்து, கடந்த மார்ச் 12 ஆம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.
அச்சிறுவனும் அவரது நண்பர்களும் சுமார் 20 ‘மர்க்குன் போலா’ வகை பட்டாசுகளை பயன்படுத்தியதுடன், அதிக வெடிப்பை உருவாக்க அத்துடன் கந்தகத்தை சேர்த்து குழி போன்ற அமைப்பில் வைத்து வெடிக்கச் செய்துள்ளதாகவும் அல்சாப்னி அகமது குறிப்பிட்டுள்ளார்.








