Aug 19, 2026
Thisaigal NewsYouTube
கடல் வழி மனிதக் கடத்தல் கும்பல் முறியடிப்பு-மஞ்சோங் கடற்பகுதியில் 108 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கடல் வழி மனிதக் கடத்தல் கும்பல் முறியடிப்பு-மஞ்சோங் கடற்பகுதியில் 108 பேர் கைது

Share:

பேராக், மஞ்சோங் கடற்பகுதியில் கடல் வழியாக சட்டவிரோத குடியேறிகளை கடத்தி வந்த கும்பலை குறிவைத்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையக குற்றப்புலனாய்வுத் துறை நடத்திய ‘ஒப் பிந்தாஸ்’ அதிரடி நடவடிக்கையில் 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கடல் படகோட்டிகள், உதவியாளர்கள் மற்றும் கரையோரக் கண்காணிப்பாளர்களாகச் செயல்பட்டதாக நம்பப்படும் 5 இந்தோனேசிய ஆடவர்களும், ஆவணங்களின்றி பயணித்த 103 இந்தோனேசிய குடியேறிகளும் அடங்குவர். இவர்களில் குழந்தைகளும் இருந்ததாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மஞ்சோங் கடற்பகுதி மற்றும் பந்தாய் ரெமிஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், சந்தேக நபர் ஒருவரின் உடை மற்றும் பயணப் பெட்டியில் இருந்து 5.8 கிலோ சாபு போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒவ்வொரு குடியேறியிடமும் 800 முதல் 1,800 ரிங்கிட் வரை கட்டணம் வசூலித்து, அவர்களை ‘போம் போம்’ படகுகள் மூலம் கடல் வழியாக மலேசியாவுக்குள் அல்லது வெளிநாடுகளுக்குக் கடத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.

இந்த கும்பலுக்கு எதிராக சட்டவிரோத குடியேறிகள் கடத்தல், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது என்று டத்தோ குமார் தெரிவித்தார்.

Related News