ஷா ஆலாம் வட்டாரத்தில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட பகடியைத் தொடர்ந்து மூன்றாம் படிவ மாணவரைத் தாக்கியதாகக் கூறப்படும் 17 வயது மூத்த மாணவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் பள்ளியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், தாக்குதலுக்கு உள்ளான மூன்றாம் படிவ மாணவரின் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டதுடன், அவரது செவித்திறனும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே ஏற்பட்ட பகடியே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மாணவர் பின்னர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டாலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பலரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
மருத்துவ அதிகாரியின் அதிகாரப்பூர்வ அறிக்கை கிடைத்த பின்னரே மாணவரின் காயத்தின் உண்மையான தன்மை குறித்து தெரிவிக்க முடியும் என்றும் ஷாசெலி கஹார் கூறினர்.
இவ்வழக்கு, குற்றவியல் மிரட்டல் மற்றும் காயம் ஏற்படுத்திய குற்றங்களின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றும் அவர் விளக்கினார்.








