அலோர் ஸ்டாரில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிப்பு வளாகம் ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், 1,823 கிலோ மானிய சமையல் எண்ணெயை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசிய செம்பனை எண்ணெய் வாரியத்தின் தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஒரு கிலோ பொட்டலங்களாக அடைக்கப்பட்டிருந்த மானிய எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் கெடா மாநில இயக்குநர் ஹஜி முகமாட் நிஜாம் ஜமாலுடின் தெரிவித்தார்.
வளாகத்தின் 31 வயது உள்ளூர் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயைச் சேமித்து விற்பனை செய்ய தேவையான உரிமத்தை அவர் சமர்ப்பிக்கத் தவறியதாக முகமாட் நிஜாம் குறிப்பிட்டார்.
மொத்தம் 5,457 ரிங்கிட் 50 சென் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் பொருள் விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் விளக்கினார்.









