Aug 19, 2026
Thisaigal NewsYouTube
சுதந்திர தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன் மற்றும் நலனை வலுப்படுத்தும் கெசுமா - டத்தோஸ்ரீ ரமணன்
தற்போதைய செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன் மற்றும் நலனை வலுப்படுத்தும் கெசுமா - டத்தோஸ்ரீ ரமணன்

Share:

நாட்டின் 69-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை ஒட்டி, தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் சமூக நலனை மேலும் வலுப்படுத்த மனிதவள அமைச்சு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்று மதியம் புத்ராஜெயா, மெனாரா பெர்கேசோவில் நடைபெற்ற 'ஆகஸ்ட் மாத கெசுமா மாதாந்திர கூட்டம் மற்றும் சுதந்திர தின மாதக் கொண்டாட்டத்தையொட்டி தேசியக் கொடிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார்.

பெர்கேசோவின் மைபியூச்சர்ஜோப்ஸ் தளம் மூலம், நடப்பு ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் 14 வரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 733 வேலைதேடுபவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 4,393 வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பாதுகாப்புத் திட்டங்கள் நடத்தப்பட்டதன் மூலம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 951 காலிப் பணியிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், 710 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்பிலான பேஸ் பொருளாதார மீள்திறன் திட்டம், சுமார் 86,000 தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை வழங்கும் என்பதை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

சிங்கப்பூருக்கு தினமும் பணிக்குச் செல்லும் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் மலேசியர்களின் சமூகப் பாதுகாப்புக்கான பெர்கேசோ பயணிகள் திட்டமும் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.

தொழிலாளர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தி, பாதுகாப்பான வேலைவாய்ப்பு சூழலை உருவாக்குவதே கெசுமாவின் இலக்கு என்றும் டத்தோஸ்ரீ ரமணன் வலியுறுத்தினார்.

Related News