கோலாலம்பூர், பிப்ரவரி.16-
மலேசியாவில், கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், காதல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களில் 60 விழுக்காட்டினர் பெண்கள் என அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை வெளியிட்ட அறிவிக்கை ஒன்றில், ஜனவரி மாதத்தில் 100 காதல் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் 95 காதல் மோசடி வழக்குகள் மட்டுமே பதிவாகியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஒப்பீட்டு புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், கூடுதலான ஐந்து வழக்குகளானது, 5.3 விழுக்காடு அதிகரிப்பைக் காட்டுகின்றது.
மேலும், ஜனவரி மாதத்தில் காதல் மோசடியால் ஏற்பட்ட இழப்பானது, 3.5 மில்லியன் ரிங்கிட் ஆகும்.
இருப்பினும், கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட 4.9 மில்லியன் ரிங்கிட் இழப்பை ஒப்பிடுகையில், இது குறைவாகும் என்றும் புக்கிட் அமான் அறிக்கை கூறுகின்றது.








