கோத்தா கினபாலு, நவம்பர்.16-
மலேசியாவின் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கை குறித்து அதிர்ச்சி தகவலைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாகக் கொள்கலன்கள் மூலமாக போதைப் பொருட்களைக் கடத்தி வரும் இந்தக் கும்பல் குறித்துத் தெரிந்தும், தாம் பிரதமரான பின் ஓராண்டாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் ஆவேசத்துடன் தெரிவித்தார்.
கிள்ளான் துறைமுகத்திலிருந்து சென்ற போதைப் பொருள் கொள்கலன்கள் ஆஸ்திரேலியாவில் பிடிபட்ட பொது எனக்குக் கோபம் வெடித்தது!" என்று பொறுப்புள்ள நிறுவனங்களின் மெத்தனத்தைக் குறித்து பிரதமர் கேள்வி எழுப்பினார். மேலும், இந்த கும்பலில் பெரும் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், இதனால் கொலைகள் கூட நடந்திருப்பதாகவும் அவர் திடுக்கிடும் உண்மையை அம்பலப்படுத்தினார். எனினும், தற்போது பிரதமர் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதன் விளைவாக, பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அன்வார் உறுதியளித்துள்ளார்.








