ஹார்மோஸ் நீரிணை மூடப்பட்டதையடுத்து, அனைத்து ஆசியான் நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், மிகப் பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடி உருவாகும் அபாயம் இருப்பதாக மேன்மை தங்கிய பேராக் மாநில சுல்தான் நஸ்ரின் ஷா தெரிவித்துள்ளார்.
மேற்காசியாவில் நடைபெற்று வரும் மோதல் தென்கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை, கோலாலம்பூரில் நடைபெற்றும் வரும் ஆசியப் பாதுகாப்புச் சேவைகள் மற்றும் ஆசியத் தேசியப் பாதுகாப்பு 2026 நிகழ்வில், புத்ராஜெயா கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றிய சுல்தான் நஸ்ரின் ஷா, எரிசக்தி, உரங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதால், உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து, உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரித்து, பணவீக்கம் வேகமாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், குறைந்த எரிசக்தி வளங்களைக் கொண்ட நாடுகளே இந்த சூழ்நிலையில் அதிகமாக பாதிக்கப்படுவதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஹார்மோஸ் நீரிணை விரைவில் திறக்கப்பட்டாலும், மக்களின் வாழ்வாதாரத்தில் பல மாதங்கள் பாதிப்பு நீடிக்கும் என்றும் சுல்தான் நஸ்ரின் ஷா ஆரூடம் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைகள் அவசரமாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








