கோத்தா கினபாலு, பிப்ரவரி.27-
கோத்தா கினபாலு, செபங்கார், இண்டா பெர்மாய் பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கொலை வழக்கு தொடர்பாக, 71 வயது முதியவர் மீது இன்று கோத்தா கினபாலு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
71 வயது பிலுடா சாமாட் என்ற சுயதொழில் செய்து வரும் அந்த முதியவர், உயிரிழந்த பெண்ணின் முன்னாள் வருங்காலக் கணவர் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்த முதியவர், 44 வயது ஹமிடா ஹுசேன் @ லீசா என்ற பெண்மணியைக் கடந்த பிப்ரவரி 11, 2026 அன்று மாலை 6 மணி முதல் 7 மணிக்குள், கம்போங் ஸ்ரி கெனாங்கான், ஜாலான் செப்பாங்காரில் உள்ள எண் இடப்டாத வீடு ஒன்றில் கொலையைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
மாஜிஸ்திரேட் Dzul Elmy Yunus முன்னிலையில் நிறுத்தப்பட்ட பிலுடா சாமாட்டிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவுச் செய்யப்படவில்லை. இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படவிருப்பதைத் தொடர்ந்து அவரிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்படவில்லை.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த முதியவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








