காசாவுக்கான மனிதநேய உதவிகளை மேற்கொள்ளும் குளோபல் சுமூத் புளோட்டிலா 2.0 பயணத்தின் போது, இஸ்ரேலியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட 28 மலேசியர்களும், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பாதுகாப்பாக நாடு திரும்பினர்.
அவர்கள் அனைவரும் கடந்த சனிக்கிழமை அதிகாலை உள்ளூர் நேரப்படி, சுமார் 2.20 மணியளவில், சுமூத் புளோட்டிலா கட்டளை மையமான எஸ்என்சிசியின் தலைமை இயக்குநர் சானி அரபி அப்துல் அலிம் அரபி உடன், இஸ்தான்புல் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.
இந்நிலையில், துபாய் வழியாகப் பயணித்த அவ்விமானம், நேற்று இரவு 9.30 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் டெர்மினல் 1-ஐ வந்தடைந்தது.
அவர்களை வரவேற்க சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, சிக் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் தர்மிசி சுலைமான் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
அதேவேளையில், 100-க்கும் மேற்பட்ட உறவினர்களும், ஆதரவாளர்களும் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.
உறவினர்கள் சிலர், செயற்பாட்டாளர்களைக் கண்ணீருடன் வரவேற்ற காட்சி, அங்கிருந்தவர்களையும் கலங்க வைத்தது.
இதனிடையே,ரஸ்மான் மாட் அலி என்ற செயற்பாட்டாளர் இஸ்தான்புல் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இஸ்ரேலிய படையினர் தாக்கியதில் அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.








