பொதுப்பணம் கசிவு, அதிகார முறைகேடல் ஆகியவை நாட்டின் நிர்வாகத்தைச் சீர்குலைப்பதுடன், மக்களின் நலவாழ்வையும் தேசிய ஒருமைப்பாட்டையும் பாதிக்கின்றன என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகிம் சுட்டிக்காட்டியுள்ளார். ஊழலை ஒழிப்பதற்குச் சட்ட அமலாக்கம் மட்டும் போதாது என்றும், அரசு - தனியார் துறையினரிடையே நேர்மையான கலாச்சாரமும் முறையான நிர்வாக நடைமுறைகளும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்று நடைபெற்ற தேசிய நற்பரிபாலனத்திற்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில், ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் 'சான்றளிக்கப்பட்ட நேர்மை அதிகாரிகள்' - CeIO திட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டவும், நாட்டின் நிறுவனங்கள் மீதான நன்மதிப்பை உயர்த்தவும் பொதுச் சேவையில் வெளிப்படைத்தன்மை தொடர்ந்து மையப்புள்ளியாக இருக்கும் என பிரதமர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.








