தனது முன்னாள் காதலியின் தற்போதைய காதலனை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தோட்டத் தொழிலாளி ஒருவர் பத்து காஜா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
30 வயதான முகமது ஃபரிஸால் முகமது சுல்கிஃப்லி என்ற அந்நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது அதை ஒப்புக் கொள்வதாகத் தலையசைத்தார்.
என்றாலும், இந்த வழக்கானது உயர்நீதிமன்ற அதிகார வரம்பிற்குட்பட்டது என்பதால், அவரிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
மேலும், குற்றப் பத்திரிகையின்படி, கடந்த ஜூன் 10-ஆம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் 5.49 மணி வரை, 29 வயதான முகமது ஃபஹ்மி அப்துல்லா என்ற ஒப்பந்தத் தொழிலாளியை, ஜலான் டிரான்ஸ் பேராக் சாலையோரத்தில் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டானது நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது குறைந்தபட்சம் 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.










