ஜோகூரில், பாரிசான் நேஷனல் கூட்டணி தனது வேட்பாளர்கள் மற்றும் தொகுதி ஒதுக்கீடுகளில் குறைந்தது 80 விழுக்காடு பணிகளை ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவும், மீதமுள்ள அனைத்தையும் அடுத்த வாரத்திற்குள் நிறைவு செய்யும் முயற்சியில் இருப்பதாகவும் அம்மாநில இடைக்கால மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி தெரிவித்துள்ளார்.
மேலும், வேட்பாளர்களாக தேர்வு செய்யப்படாதவர்கள் இது தங்களது அரசியல் பயணத்தின் முடிவு அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்குப் பிறகும் அவர்களுக்கு பல்வேறு பொறுப்புகள் வழங்கப்படலாம் என்பதை சுட்டிக் காட்டியுள்ள ஒன் ஹஃபிஸ், அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ, கட்சியின் தேர்தல் இயந்திரத்தில் முக்கியப் பொறுப்புகளை ஏற்பவர்களாகவோ தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், இருக்கைகள் குறைவாக இருப்பதால், மற்ற கட்சிகளைப் போலவே நாமும் தொடர்ந்து கட்சிக்காகப் போராடி, கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும், காரணம், இறுதி இலக்கு மக்களுக்கு சேவை செய்வதே என்றும் ஒன் ஹஃபிஸ் தெரிவித்துள்ளார்.








