பினாங்கு, நவ.22-
பினாங்கு மாநிலத்திற்கு தனது முதலாவது விமானச் சேவையைத் தொடங்கிய ஹாங்காங்கை தளமாக கொண்ட ஹாங்காங் எக்ஸ்பிரஸ் விமானத்தின் வருகையை பினாங்கு மாநிலம் இன்று அதிகாலையில் கோலாகலமாக வரவேற்றது.
ஹாங்காங்கிற்கும், பினாங்கிற்கும் நேரடி விமானச் சேவையை மேற்கொண்டுள்ள மூன்றாவது விமான நிறுவனமாக ஹாங்காங் எக்ஸ்பிரஸ் விளங்குகிறது.
தற்போது ஹாங்காங்கிற்கும், பினாங்கிற்கும் இடையில் ஹாங் காங்கின் தேசிய விமான நிறுவனமான கெத்தே பசிபிக் மற்றும் மலேசிய உள்ளூர் விமான நிறுவனமான ஏர் ஆசியா ஆகியவை விமானச் சேவையை மேற்கொண்டு வருகிறது.
நேற்று இரவு 8.30 மணிக்கு ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஹாங்காங் எக்ஸ்பிரஸ் விமானம், பின்னிரவு 12.15 மணியவில் பினாங்கு பாயான் லெப்பாஸ் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர் உள்ளூர் நேரப்படி விடியற்காலை 1.15 மணிக்கு பினாங்கிலிருந்து ஹாங் காங் புறப்பட்டது.
பினாங்கிற்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான வழித்தடம் விரிவுப்படுத்தப்பட்டு இருப்பது, அனைத்துலக விமானச் சேவை தொடர்பை மேம்படுத்துவதில் மற்றொரு முக்கிய படிநிலை உயர்வை, இது காட்டுவதாக உள்ளது என்று பினாங்கு சுற்றுலா மற்றும் பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹோன் வை தெரிவித்தார்.








